கொரோனா காலத்தில் மத்திய அரசு இலவசமாக வழங்கிய அரிசியை, வெளிச்சந்தையில் விற்று அமைச்சர் காமராஜ் முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகம் மீட்போம்’ என்ற பெயரில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக மாவட்டந்தோறும் சிறப்புப் பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொலி மூலம் உரையாற்றினர்.
அப்போது பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டு காலமாக கல்வி, வேலை வாய்ப்பு, தமிழ் வளர்ச்சி, சமூகநீதி ஆகிய அனைத்தையும் பாஜகவுடன் சேர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிதைத்துவிட்டதாக சாடினார். அத்துடன், அவரது அமைச்சரவையில் உள்ளவர்கள் பல்வேறு ஊழல் புகாரில் சிக்கியுள்ளதாகவும், அதனை, தொடர்ந்து அம்பலப்படுத்துவோம் என்றும் கூறினார்.
குறிப்பாக கொரோனா ஊரடங்கின் போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய இலவச அரிசியிலும் முறைகேடு நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார். ஏப்ரல் முதல் மூன்று மாதங்களுக்கு மத்திய அரசு வழங்கிய அரிசியை, வெளிச்சந்தையில் விற்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டினார்.