90 சதவீத நுரையீரல் பாதிப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளியை பூரணமாக குணப்படுத்தி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நாகை மாவட்டம் வெளிப்பாளையத்தை சேர்ந்த மோகன் என்பவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 21ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறல் தவிர ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், இருதய அடைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்தன. மேலும், அவருக்கு கொரானா தொற்று இருப்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து மோகன் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது அவருக்கு எடுக்கப்பட்ட சி.டி ஸ்கேன் பரிசோதனையில் 90% நுரையீரல் பாதிப்பு இருந்தது. உயிர் பிழைப்பதற்கு குறைவான சாத்தியக் கூறுகள் மட்டுமே இருந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் தனிக்கவனம் செலுத்தி சிகிச்சை அளித்தனர். இதன் காரணமாக 33 நாட்களுக்குப் பின் மோகன் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.