கேரளாவில் வரும் 19-ம் தேதி வரை மழை தொடரும்

கூட்டிக்கல் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடல் மீட்கப்பட்டிருக்கிறது. அதுபோல இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. கோட்டயத்தில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள்.

இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் நிலச்சரிவிலும், கார் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதிலும் என இறந்த ஆறுபேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீனச்சல், மணிமலை ஆறுகளில் தண்ணீர்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் வி.என்.வாசவன் தலைமையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் காணாமல்போன 14 பேரை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் நேற்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் மலையோர பகுதிகளில் வாகனப் போக்குவரத்து செயல்படுத்தக்கூடாது எனவும், வரும் 19-ம் தேதி வரை மழை தொடரும் என்பதால் அதுவரை சபரிமலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று முதல் வரும் 21-ம் தேதிவரை நடை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிக் பாஸ் வீட்டிலிருந்து முதல் ஆளாக எலிமினேட்டானவர் இவர் தான்..!