பிரபல நிதி நிறுவனமான முத்தூட் பைனான்சில் கொள்ளை !

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள முத்தூட் பைனானஸ் நிறுவனத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை வழக்கம்போல நிதி நிறுவனம் திறக்கப்பட்டு வேலை செய்ய ஊழியர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.திடீரென அங்கு முகமூடி அணிந்தபடி ஆறு பேர் அடங்கிய ஒரு கும்பல் உள்ளே வந்தது . அவர்கள் கையில் துப்பாக்கிகள் இருந்துள்ளன. வெளியே நின்ற காவலரை துப்பாக்கி முனையில் ஒரு கொள்ளையன் பிடித்து வைத்துக்கொண்டான்.

மேலும் அங்கிருந்து ஊழியர்களை துப்பாக்கி முன்னையில் மிரட்டி நிறுவன ஊழியரிடம், சாவியை வாங்கிக் கொண்டு, லாக்கரை திறந்துள்ளனர்.மேலும் அங்கு இருந்த 3125 சவரன் தங்க நகை மற்றும் 96 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர்.கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 7 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேற்கொண்டு தகவல் கொடுக்கப்பட்டு அங்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்கு பதிவு செய்யப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா பதிவான காட்சிகளை ஆய்வு செய்கிறார்கள். அலுவலக ஊழியர்களிடம் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.