Bank Transaction: மத்திய பிரதேசத்தை சேர்ந்த வாலிபருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த வாலிபர் மத்திய பிரதேச மாநிலம் கந்த்வாவில் உள்ள தேஷ்கானில் வசித்து வருகிறார். அந்த இளைஞரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.300 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதில் என்ன டிவிஸ்ட் என்றால், தன்னுடைய வங்கிக் கணக்கில் 300 கோடி ருபாய் பணப் பரிவர்த்தனை நடைபெற்றது அந்த இளைஞருக்கே தெரியாது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்படி, அந்த இளைஞன் மொபைல் கடை நடத்தும் விவசாயி ஒருவரின் மகன். அவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.290 கோடியே 39 லட்சத்து 36 ஆயிரத்து 817 பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் கிடைத்ததும் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இளைஞரின் பான் கார்டு அடிப்படையில் மும்பையில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் அவருக்கு வங்கிக் கணக்கு உள்ளது. முதன்முறையாக இவ்வளவு பெரிய தொகை அவருடைய வங்கிக் கணக்கில் பணப் பரிவர்த்தனையாகியுள்ளது.
இது குறித்து பிரவீன் கூறுகையில், “மும்பையில் தனது பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. தனது கணக்கில் இருந்து ரூ.300 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. பான் கார்டை எடுத்து ஏமாற்றி உள்ளனர். ஆக்சிஸ் வங்கியை தொடர்பு கொண்டபோது, உங்கள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
கால் சென்டரில் பணிபுரிய எனது பான் கார்டை கொடுத்திருந்தேன். அங்கிருந்து மோசடியாக எனது பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு இந்த பணப்பரிவத்தனை நடைபெற்றிருக்கலாம். இது குறித்து வருமானவரித்துறை விசாரணையை துவங்கியுள்ளது” என தெரிவித்தார். இதுபோன்ற வங்கி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள், விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க: Gold Rate: தங்கம் விலை தொடர் சரிவு