Supreme Court: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு

50-per-cent-reservation-for-government-doctors-in-super-specialty-medical-courses-supreme-court
அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு

Supreme Court: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தனியார் மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. முன்னதாக வழக்கு விசாரணையின்போது, ’தமிழக அரசின் அரசாணை புதிதல்ல. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்குவது என்பது தனி இடஒதுக்கீடு அல்ல. இது ஒருவகையான மாணவர் சேர்க்கை தான் (different mode of admission).

இதையும் படிங்க: Gold Rate: தங்கம் விலை தொடர் சரிவு

இது சேவை மனப்பான்மையுடன் பணி செய்யும் அரசு மருத்துவர்களுக்கான முன்னுரிமை. மேலும், இது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். எனவே இந்த ஒதுக்கீட்டை அமல்படுத்தலாம்’ என தமிழக அரசு மற்றும் கேவியட் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ’இது சாதிவாரியான ஒதுக்கீடு இல்லை. மாறாக இது அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீடு. இது அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புக்கான ஒரு நுழைவு கருவி மட்டுமே. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்த ஒதுக்கீடு சரியானதே என தெரிவித்துள்ளது என’ வாதிடப்பட்டது.

அப்போது மத்திய அரசு தரப்பில், ’சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் 2017-ல் இருந்து இடஒதுக்கீடு வழங்கவில்லை. எனவே அந்த நிலையே தொடர வேண்டும். இந்த ஆண்டும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க கூடாது’ என எதிரப்பு தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், அரசு மருத்துவர்களுக்கு இவ்வாறு தனி இடஒதுக்கீடு வழங்குவது பாகுபடுத்தி பார்ப்பது என்றும், இவ்வாறு உள்ஒதுக்கீடு செய்ய முடியாத எனவும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கூறியுள்ளது; எனவே தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தனியார் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட உச்ச நீதிமன்றம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டு வழங்கலாமா, வேண்டாமா என்பது தொடர்பான இடைக்கால தீர்ப்பை வழங்க வழக்கை ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், ’தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம்’ என அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த ஆண்டு தமிழக அரசின் அரசாணைப்படி அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மேற்படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கலந்தாய்வு நடத்தவும் அனுமதி வழங்கு உத்தரவிட்டது.

அதேநேரம் மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்த பிரதான வழக்கை, விடுமுறைக்கு பின்னர் விசாரிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Bank Transaction: விவசாயி மகன் பெயரில் ரூ.300 கோடி பணப்பரிவர்த்தனை..!