சிக்கன் உணவு சாப்பிட்ட மேலும் 24 பேருக்கு சிகிச்சை

ஆரணியில் ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி பலியானதை அடுத்து அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது. மேலும் 24 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளரும் சமையலரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (46), அரிசி ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி (40).

இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக இருந்து வருகிறார். இவர்களுக்கு லோஷினி (10) என்ற மகளும் சரண் (14) என்ற மகனும் உள்ளனர்.

இவர்கள் 4 பேரும் கடந்த 8ஆம் தேதி இரவு ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அசைவ ஹோட்டலில் தந்தூரி உணவு வகைகளை சாப்பிட்டுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து வீட்டுக்கு சென்ற அவர்களுக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் அங்கு லோஷினியின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அச்சிறுமி இறந்துவிட்டார். அதே ஹோட்டலில் சாப்பிட்ட 24 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.