கற்பூரவள்ளி இருக்கும் இடத்தில் சகல சௌபாக்கியமும் நிலைக்கும் என்பது நம்பிக்கை. ஒரு மருத்துவ பொருளாகவும், ஆன்மிக அருமருந்தாகவும் விளங்கும் கற்பூரவள்ளியானது ஒரு புதர்ச் செடியாகும். இதன் ஒரு சிறிய தண்டை ஒடித்து மற்றொரு இடத்தில் நட்டு வைத்தால் வளர்ந்து மனம் மகிழச்செய்யும் தன்மை கொண்டது.
கற்பூரவள்ளி இலை சற்று கடினத் தன்மை கொண்டது. இவை மருத்துவ பயன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருமல், ஜலதோஷம், தலைவலி உள்ளிட்டவற்றை போக்கும் தன்மை கொண்ட இந்த இலை லட்சுமி கடாக்ஷம் அருளவும் செய்கிறது.
வியாபாரம், தொழில் விருத்தி, கடன் தொல்லை நீங்க, தன பாக்கியம் உள்ளிட்டவற்றில் கற்பூரவள்ளி பெரும் பங்கு வகிக்கிறது. செல்வ செழிப்போடு வாழ பலரும் பல பரிகார முறைகளை செய்து வழிபடுவதுண்டு. அந்த வகையில், பச்சை கற்பூரம், மஞ்சள், கருஞ்சீரகம், ஏலக்காய் உள்ளிட்ட பல பொருட்களை தொழில் செய்யும் இடத்திலும், பணம் வைக்கும் அறையிலும், பூஜை அறைகளிலும் வைத்து வழிபடுவார்கள்.
சகல செல்வமும் கிடைத்து, குடும்பங்களில் நிலவும் பிரச்சனைகள் காற்றில் கரைய வேண்டும் என நினைக்கும் நம்பிக்கை உடையவர்கள் இந்த முறையை செய்து பலன் பெறலாம்.
கற்பூரவள்ளியில் உள்ள நறுமணம் தீய சக்திகளை விரட்டும் என்று நம்பப்படுகிறது. தொழில், வேலை உள்ளிட்டவற்றில் உள்ள போட்டிகள், கண்திருஷ்டி உள்ளிட்டவை நீங்க கற்பூரவள்ளி இலையை காய வைத்து அதனை பொடியாக தயார் செய்து, சாம்பிராணியுடன் சேர்த்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தூபம் போட்டு வந்தால் சஞ்சலங்கள் நீங்கும்.
கற்பூரவள்ளி இலைகளை பறித்து அதன் மீது மஞ்சள் தடவி, பீரோ உள்ளிட்ட பணம் சேகரிக்கும் இடத்தில் வைத்து வந்தாலும் நன்மை கிடைக்கும். அதே போல், வீட்டு முற்றத்தில் துளசி செடியை எப்படி வைத்து வழிபடுகிறோமோ, அதே போல கற்பூரவள்ளி செடியையும் வைத்து வழிபட்டு வர குடும்பத்தில் எந்த கெட்ட சக்தியின் தாக்கமும் இல்லாமல், செல்வ வரவு நிலைக்கும்.