திருவனந்தபுரம்: மண்டல பூஜை முடிவடைந்ததும் (Sabarimala Ayyappan Temple Makara Jyothi) மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட அன்று முதல் தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பன் கோயிலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். அதிலும் மண்டல பூஜை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததை போன்று மகரவிளக்கு சமயத்திலும் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில், சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று (ஜனவரி 14) நடக்கிறது. இதனால் இன்று மாலை 6.20 மணிக்கு ஐயப்பனுக்கு ஆபரணங்களை அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. அந்த நேரத்தில் பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் சாமி பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சிக்கொடுப்பார். அப்போது பக்தர்கள் அனைவரும் சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்களை எழுப்புவர் என்பது குறிப்பிடத்தக்கது.