புதுச்சேரி : Karaikal ammaiyar Utsavam in karaikal : 2 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண உற்சவம். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதையொட்டி காலைக்காலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஸ்ரீ சுந்தராம்பிகை சமேத கைலாசநாதர் கோயில் சார்பில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது. சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார்.
மாங்கனித் திருவிழாவின் 2-வது நாளான செவ்வாய்க்கிழமை காரைக்கால் அம்மையாரின் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக திருக்கல்யாண உற்சவம் நடைபெறாமல் இருந்ததால், நிகழாண்டு நடைபெற்ற உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கல்யாண நிகழ்ச்சியில், சிறப்பு ஹோமம் நடத்தி, திருமாங்கல்யத்துக்கு சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியர்கள் மேற்கொண்டனர். கன்னிகாதானம் செய்து, பரமதத்தர் சார்பில் சிவாச்சாரியர் அம்மையாருக்கு மாங்கல்யதாரணம் செய்து வைத்தார். அப்போது பக்தர்கள் அட்சதையை தூவி காரைக்கால் அம்மையாரை வழிபட்டனர்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாஜிம், திருமுருகன், நாகதியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். திருவிழாவையொட்டி காரைக்காலில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.