Special wards for 24 hour fever in Salem district: சேலம் மாவட்டத்தில் 24 மணிநேர காய்ச்சலுக்கான தனிச் சிறப்பு வார்டுகள்

சேலம்: Special wards for 24 hour fever in Salem district. சேலம் மாவட்டத்தில் பருவமழை நோய்களைக் கட்டுப்படுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணி நேரமும் செயல்படும் காய்ச்சலுக்கான தனிச் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவமழை கால நோய்களான டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் மற்றும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றை தடுக்கவும், உரிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

மேலும் மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கான தனிச் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் 240 இடங்களிலும், சேலம் மாநகராட்சிப் பகுதியில் 28 இடங்களிலும் என மொத்தம் 268 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்கள் மூலமாக காய்ச்சலுக்குரிய சிகிச்சை, மருந்து மாத்திரைகள், விழிப்புணர்வு மற்றும் நிலவேம்புக் குடிநீர் ஆகியவை வழங்கப்படுகிறது. இதைத் தவிர்த்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான தனி வெளிநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எவ்வித அச்சமோ, பயமோ அடையத் தேவையில்லை.

மேலும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் பொது சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி துறையினர் ஒருங்கிணைந்து காய்ச்சல் தடுப்பு பணிகளான டெங்கு கொசு ஒழிப்புப் பணி, புகை மருந்து அடித்தல், கிருமி நாசினிகள் தூவுதல், குளோரினேசன் செய்யும் பணி மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்குதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றது. அங்கீகாரம் பெற்ற மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்து கடைகளில் நேரடியாக மருந்து, மாத்திரைகள் வாங்கி உட்கொள்ளக் கூடாது.

சாதாரண சளி, காய்ச்சல் தானே என அலட்சியப்படுத்தாமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கீகாரம் பெற்றுள்ள மருத்துவர்களிடம் மட்டும் சென்று உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், மாவட்டத்தில் கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் ஊராட்சிப் பகுதிகளில் 20 நபர்களும், பேரூராட்சி பகுதிகளில் 10 நபர்களும், நகராட்சி பகுதிகளில் 30 நபர்களும் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் 600 நபர்களும், பொது சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி துறையினர் ஒருங்கிணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளான கொசுப்புழு ஒழிப்புப் பணி, புகை மருந்து அடிக்கும் பணி, கிருமி நாசினிகள் தூவுதல், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், தங்கள் பகுதிகளில் பணியாற்றும் கொசுப் புழு ஒழிப்புப் பணியாளர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.