Rs.1,000 for college girls: தமிழக கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000; டெல்லி முதல்வர் தொடங்கி வைப்பு

சென்னை: சென்னையில் புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார்.

அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில் இந்த திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதற்குப்பின், ஏற்கெனவே இருந்த தாலிக்குத் தங்கம் வழங்கும் மூவலூர்‌ ராமாமிர்தம்‌ அம்மையார்‌ திட்டமான பெண் குழந்தைகளின் உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கும் திட்டமாக அவர் மாற்றினார். இந்த திட்டம் பொது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதைத்தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித்‌ திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக, https://penkalvi.tn.gov.in/ என்ற பிரத்யேக‌ இணைய தளம்‌ துவங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம், ஆசிரியர் தினமான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னை, பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்று வரும் விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று, திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

அவருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சமூக நலம் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

டெல்லியில் உள்ளதைப் போன்ற மாதிரிப் பள்ளிகள் மற்றும் நிபுணத்துவம் பெற்ற பள்ளிகள் சிலவற்றை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்துள்ளார். முன்னதாக இதற்கான அழைப்பிதழைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அர்விந்த் கேஜ்ரிவாலிடம் நேரில் வழங்கினார். இந்தத் திட்டத்துக்கு, அண்மையில் புதுமைப் பெண் திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ் சுமார் 3 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்தனர். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு, புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000 உயர் கல்வி உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கல்லூரி மாணவிகள் ஒரு லட்சம் பேருக்கு மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை அவர்களது மொபைல் எண்ணுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.