சென்னை: L.Murugan requested to hoist the national flag in every house: ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை தனியார் கல்லூரியில் நடந்த விழாவில், தென்னிந்திய ஆய்வுக் கல்வி மையம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஓலம்’ காணொலியை மத்திய இணை அமைச்சர் வெளியிட, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.சி.சண்முகம் பெற்றுக் கொண்டார்.
விழாவில், மத்திய இணையமைச்சர் பேசுகையில், வளமான பாரதத்தை சூழ்ச்சியின் காரணமாக வீழ்த்தி மீண்டும் எழுச்சி கண்ட கதையை இந்த காணொலி விளக்குகிறது என்றார்.
மேலும், இந்த உலகத்திற்கு ஒரு தலை சிறந்த நாடக இந்தியா உள்ளதாகவும், குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளில் இந்த நாடு அடைந்துள்ள வளர்ச்சியை அனைவரும் கண்கூடாக காண முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி கப்பலை இயக்கிவர் வ.உ. சிதம்பரனார் என்ற அவர், வ உ சிதம்பரனாரின் தற்சார்பு கனவை இன்று பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றிகொண்டு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் வ உ சி யின் 150 ஆவது பிறந்த தினம் வருவது மேலும் சிறப்பு வாய்ந்தது என தெரிவித்தார்.
பிரதமர் விடுத்த அழைப்பின்படி, வரும் 13 முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் எனவும், இது ஆங்கிலேயர்களின் தாக்குதலின்போது தேசிய கொடியை கீழே விழாமல் காத்த திருப்பூர் குமரனுக்கு செலுத்தும் மிகச் சிறந்த காணிக்கையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இளைஞர் மத்தியில் அக்னிபத் திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது, லட்சக்கணக்கான இளைஞர்கள் தாமாகவே முன்வந்து அக்னிபத் திட்டத்திற்கு பதிவு செய்து வருவதாக கூறினார்.
இந்தியாவின் நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள 2047 ஆம் ஆண்டில் அப்துல் கலாம் ஐயா கண்ட கனவுபடி, இந்தியா உலகிற்கே வழிகாட்டியாக திகழும் என பேசினார்.
அதேபோல் இன்று ஜல்சக்தி துறை அமைச்சர் இன்று தெரிவிக்கையில், இல்லம்தோறும் தேசியக்கொடி கொண்டாட்டத்தை அனைத்து தரப்பினரும் மேற்கொள்ளும் வகையில் ஜல்சக்தி அமைச்சகத்தின் அனைத்து அதிகாரிகளும் அலுவலர்களும் தங்கள் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார். தகுந்த முறையில் இந்த கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை முன்னிட்டு அனைத்து இல்லங்களிலும் தேசியக்கொடியை ஏற்றும் இந்த பிரச்சாரத்தை ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைத்து அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் தொலைநோக்கு திட்டத்தை அனைத்து குடிமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஜல் சக்தி அமைச்சகம் தேவையான தகுந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தேசியக்கொடியை ஏற்றுவது மட்டும் இன்றி ஏற்றப்பட்டு இருக்கும் இடம் குறித்த தகவல்களை அதற்குரிய ஹர் கர் திரங்கா என்ற இணையதள பக்கத்தில் பகிர்ந்து கொள்ளவும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு பகிர்ந்து கொள்ளும் போது அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கிறது. தங்கள் வீடுகளில் அதிகாரிகளும் அலுவலர்களும் கொடிகளை ஏற்றுவதோடு மட்டுமின்றி தங்களது நண்பர்களையும் குடும்பத்தினரையும் இதுபோல் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.