K. S. Alagiri: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அலுவலகத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராஜேஷ் குமார், ஹசன் மொஹலானா, மாநில துணை தலைவர் கோப்பண்ணா,கிருஷ்ணன் மூர்த்தி. மாநில பொது செயலாளர் சிரஞ்சீவி, மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி, மகிளா காங்கிரஸ் சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி, சிதம்பரத்தின் புகழை அழிக்க வேண்டும் என மோடி அரசாங்கம் சிபிஜ சோதனையை நடத்துகிறார்கள். எத்தனை முறை அவரது வீட்டில் சோதனை நடத்துவீர்கள். இது ஒரு தேவையற்ற செயல் என்று கூறினார்.
மேலும், திமுக காங்கிரசுக்கு ஒதுக்கிய ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை யாருக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவு செய்யும், கட்சித் தலைமையிடம் நான் எம்.பி. பதவி கேட்டு கோரிக்கை வைத்ததாக ஊடகங்களில் மட்டும்தான் செய்தி வெளியாகி உள்ளது. யார் வேண்டுமானாலும் கோரிக்கை வைப்பார்கள் என்று கூறிய அவர், ப.சிதம்பரத்திற்கு ராஜ்யசபா எம்.பி. பதவியை ஒதுக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சி செய்வேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது குறித்து கூறுகையில், ஆளுநர் தமிழ்நாட்டில் பேச கற்றுக்கொண்டார் என்பது இதில் இருந்து தெரிகிறது எனவும், ஆளுநர் இதற்கு முன்னால் உளவு பார்க்கும் வேலையை தான் பார்த்துக்கொண்டிருந்தார் என்று கூறினார். மேலும், பிற மாநிலங்களில் தமிழை வர்ப்பதை விட தமிழ்நாட்டில் தமிழ் வாழ வழி விட்டாலே போதும் என அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுக ஒதுக்கியுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் பதவி காலம் முடிவடைய உள்ளதால், மீண்டும் தமிழகத்தில் இருந்து அவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் ‘ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி’ என காங்கிரஸ் கட்சி முடிவெடுத்திருக்கும் சூழலில், கார்த்தி சிதம்பரம் மக்களவை உறுப்பினராக இருப்பதால், ப.சிதம்பரம் மாநிலங்களவை உறுப்பினராவதற்கு சிக்கல் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Perarivalan case: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை