சென்னை: ITD, Tamil Nadu & Puducherry Region, Advises the Public to desist from fraudulent persons. மோசடி பேர்வழிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழ்நாடு & புதுச்சேரி பிராந்திய வருமான வரித்துறை மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு & புதுச்சேரி பிராந்திய வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையர் வி வித்யாதர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பண மோசடி செய்வதை நோக்கமாகக் கொண்டு அங்கீகரிக்கப்படாத மின்னஞ்சல் முகவரியிலிருந்து தவறான கடிதங்கள் / மின்னஞ்சல் அனுப்பி மக்களை ஏமாற்ற நேர்மையற்ற சக்திகள் முயற்சி செய்வது வருமானவரித்துறையின் கவனத்திற்கு வந்துள்ளது. இதே போல் தொலைபேசி அழைப்புகளும் வருவதாக தெரிகிறது.
உங்களின் சொந்தக் கணக்கிலிருந்து ஏதாவது தொகையோ அல்லது வரியோ அல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் பணம் செலுத்துவது பற்றி மின்னஞ்சல் / கடிதம் / தொலைபேசி அழைப்புகள் வரப்பெற்றால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறையின் அங்கீகரிக்கப்பட்ட www.tnincometax.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துறையின் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண் மூலம் சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மக்களை வருமானவரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தத் துறையின் அதிகாரபூர்வ கடிதப் போக்குவரத்து அனைத்தும் DIN எனப்படும் ஆவண அடையாள எண்ணினை கொண்டிருக்கும் என்றும் அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே அனுப்பப்படும் என்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. எனவே, மோசடி பேர்வழிகளின் முயற்சிகளுக்கு இரையாக வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வரியை செலுத்துவதற்கு எந்த இணைய இணைப்பையும் வருமான வரித்துறை வழங்குவதில்லை. உரிய செலானில் இணையம் அல்லது வங்கி மூலம் மட்டுமே வரிசெலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய மோசடி பேர்வழிகளின் முயற்சிகளையும், மோசடியான மின்னஞ்சல் தகவல்களையும், புறக்கணிக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையர் வி.வித்யாதர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.