Bus-car collision near Kovilpatti: கோவில்பட்டி அருகே பஸ் – கார் நேருக்குநேர் மோதல்; 3 மாணவர்கள் உயிரிழப்பு

தூத்துக்குடி: Three college students died in a head-on collision between a bus and a car near Kovilpatti. கோவில்பட்டி அருகே பஸ் – கார் நேருக்குநேர் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகரை சேர்ந்த லட்சுமணப் பெருமாள் மகன் கீர்த்திக் (வயது 23). விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் இவர், நேற்று (19ம் தேதி) மாலை கல்லூரி முடித்து கீர்த்திக் தனது நண்பர்களான கோவில்பட்டி அருகே வானரமுட்டியை அடுத்த வெயிலுகந்தபுரத்தைச் சேர்ந்த உதயகுமார் மகன் செந்தில்குமார் (வயது 24), கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் மேலதெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் அஜய் (வயது 23), கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 1வது தெருவை சேர்ந்த அழகர்சாமி மகன் அருண்குமார் (வயது 21), விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓ. மேட்டுப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் விக்னேஷ் (வயது 23) ஆகியோருடன் கோவில்பட்டிக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர்.

இதனையடுத்து, இளையரசனேந்தல் சாலையில் தனியார் கல்லூரியின் அருகே உள்ள பாலத்தில் வந்தபோது, எதிரே வந்த தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கீர்த்திக், செந்தில் குமார், அஜய் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருண்குமார், விக்னேஷ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த், உதவி ஆய்வாளர் அரிக் கண்ணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதனைத்தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உதவியுடன் இடிப்பாடுகளின் சிக்கிய 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல் தனியார் பேருந்தில் வந்து காயமடைந்த தனியார் கல்லூரி தோட்ட தொழிலாளி பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த மாடசாமி (வயது 62) என்பவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் மூன்று கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கோவில்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.