சென்னை: தமிழகத்தில் கொரோனா சமயத்தில் பணியமர்த்தப்பட்ட (Admk Support To Nurse Strike) 2300 தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு அளித்திருப்பதாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கொரோனா நெருக்கடி சமயத்தில் 2300 தற்காலிக செவிலியர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு டிசம்பர் 31-ந்தேதியுடன் பணிக்காலம் நிறைவடைந்துவிட்டது. இனிமேல் பணிநீடிப்பு இல்லை என்று கூறப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்திலும் பணியில் அமர்த்தப்படுவார்கள். பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என தமிழக அரசு உறுதி அளித்தது. ஆனால் இனி வரும் காலங்களில் தற்காலிக செவிலியர்களாக பணி செய்ய மாட்டோம். உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் நடைபெற்று வரும் செவிலியர்கள் போராட்டத்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரடியாக சென்று ஆதரவு அளித்துள்ளார். மேலும் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவை தெரிவிக்க சொன்னார் என்ற கருத்தையும் கூறினார்.