P.T.Usha : மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி: தடகள வீரர்களுக்கும் விளையாட்டுத்துறைக்கும் கிடைத்த கௌரவம்: பி.டி. உஷா

தமிழ்நாடு: P.T.Usha : மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி, தடகள வீரர்களுக்கும் விளையாட்டுத்துறைக்கும் கிடைத்த கௌரவம் என்று தடகள வீராங்கனை பி.டி. உஷா தெரிவித்தார்.

தமிழ்நாடு சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை தொடக்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி எனக்கு வழங்கி இருப்பது இந்திய விளையாட்டு துறைக்கு அளிக்கப்பட்ட கௌரவமாகும். குறிப்பாக தடகள வீரர்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாகும். தற்போது தடகள வீரர்களில் நீரஜ் சோப்ரா நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடி வருகிறார்.

இதேபோல தடை ஓட்டம் , 100 மீட்டர் ஓட்டங்களில் விளையாட்டு வீரர்கள் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளனர். நாங்கள் விளையாடிய காலத்தில் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு விளையாட்டு துறைக்கு செய்யப்படவில்லை. தற்போது மத்திய அரசு விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. மாநிலங்களவையில் தனக்கு பேச வாய்ப்பளிக்கும் போது விளையாட்டு துறை சார்ந்த கோரிக்கைகளை முன் வைத்து பேசுவேன்.

விளையாட்டு துறைக்கு பிரதமர் மோடி, மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வீரர்களை ஊக்கமளித்து வருகிறார். வீரர்களை அடிக்கடி சந்தித்து அவர்களின் விளையாட்டுத் திறன் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடி தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று நாடு திரும்பும் வீரர்களை சந்தித்து பேசி அவர்களை கௌரவப்படுத்தி வருகிறார்.

இது விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக உள்ளது. இது போன்ற நடவடிக்கைகளால் அடுத்த ஒலிம்பிக்கில் நமது விளையாட்டு வீரர்களிடம் இருந்து அதிக‌ பதக்கங்களை வெல்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.