Pongal Greetings: இந்த நன்னாளில் மக்கள் வாழ்விலும், அன்பும் அமைதியும் நிலவட்டும்: எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து

சென்னை: அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் (Pongal Greetings) எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: உலக தமிழர்கள் அனைவரும் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், எனது அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

பொங்கல் திருநாளின் முதல் பண்டிகையாக போகி தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என 4 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன், பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில் கரும்பு, மஞ்சள், வாழை முதலான விளை பொருட்களை வைத்து, புதுப் பானையில் அரிசியிட்டு ‘‘பொங்கலோ பொங்கல்’’ என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனை வணங்கி கொண்டாடுவர்.

பிறக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும், பகலும் அயராது பாடுபட்டுவரும் உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள் ஆவார்கள். போற்றுதலுக்குரிய உழவர் பெருமக்கள், தங்கள் வாழ்வில் ஏற்றம்பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது ஆட்சிக் காலங்களிலும், அதனைத் தொடர்ந்து மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்ற எனது ஆட்சியிலும், பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டன என்பதை, இந்த நேரத்தில் பெருமையோடு நினைவுகூர விரும்புகிறேன்.

மேலும் அறுவடைத் திருநாளாம் இந்தப் பொங்கல் நன்னாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும், இப்பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும், வியர்வை சிந்தி உழைத்து வரும் நம் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் வனத்தைக் கொண்டுவந்து சேர்க்கட்டும். இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல். இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள் என்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.