Dr Saravanan Joined Aiadmk: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன்

சென்னை: தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் (Dr Saravanan Joined Aiadmk) அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும்போது தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது சிலர் செருப்பு வீசினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து டாக்டர் சரவணன் பா.ஜ.க.வில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் மீண்டும் தி.மு.க. செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அ.தி.மு.க.வில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும் டாக்டருமான சரவணன் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பின்னர் அவர் வீடியோ ஒன்றில் பேசும்போது, வரப்போகும் காலக்கட்டத்தில் வலுப்பெற எடப்பாடி பழனிசாமிக்கு துணையாக இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.