Death Of Prime Ministers Mother Tributes: பிரதமர் தாயார் மறைவு: பா.ஜ.க. அலுவலகங்களில் அஞ்சலி

சென்னை: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (Death Of Prime Ministers Mother Tributes) இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாயார் மறைவு செய்தி அறிந்த உடன் குஜராத் சென்ற பிரதமர் மோடி அகமதாபாத் மருத்துவமனைக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் தனது தாயாரின் உடலை பிரதமர் தனது தோளில் சுமந்து வந்தார்.
அதன் பின்னர் காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமரின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வுகளில் பிரதமர் மோடி உடனிருந்து செய்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அதே போன்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது இரங்கலை தெரிவித்தார். அதன் பின்னர் ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் பா.ஜ.க. அலுவலகங்களில் பிரதமர் மோடியின் தாயாருக்கு அஞ்சலி செலுத்த மாவட்ட தலைவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற அறிக்கையும் வெளியிட்டார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நம் பாரதப் பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, அனைத்து பாஜக அலுவலகங்களிலும், பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 வரை, சென்னை பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்திலும், மற்றும் ஒவ்வொரு மாவட்ட தலைமை அலுவலகத்திலும், அன்னை ஹீராபென் திருஉருவப் படத்திற்கு கட்சியின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பொதுமக்களும் மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள். அனைத்து மாவட்ட தலைவர்களும் உடனடியாக இதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.