Bjp Protested: கொடி கம்பத்தை அகற்றிய தி.மு.க.வை கண்டித்து பா.ஜ.க.வினர் போராட்டம்

சென்னை: குன்றத்தூர் அடுத்த கோவூர் அருகே (Bjp Protested) பா.ஜ.க. சார்பில் கொடிக்கம்பம் நடப்பட்டு இருந்தது. அந்த இடம் கோவூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் கொடி கம்பம் நடப்பட்டதாக கூறி ஊராட்சி நிர்வாகம் பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டு அங்கு ஊராட்சிக்கு சொந்தமான இடம் என்ற போர்டு வைக்கப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த பா.ஜ.க.வினர் தி.மு.க. ஊராட்சி மன்றத்தலைவர் சுதாகரை கண்டித்து கோவூரில் இன்று (ஜனவரி 3) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சாய் சத்யன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மற்றும் நாகராஜன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதனை தொடர்ந்து அங்கு வந்த மாங்காடு போலீசார் பா.ஜ.க.வினரை கைது செய்ய முற்படும்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் பா.ஜ.க.வினர் குன்றத்தூர், போரூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அனைவரையும் குண்டு கட்டாக தூக்கி வாகனங்களில் ஏற்றியபோது போலீசாருக்கும், கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனைவரையும் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.