Railways Revenue: பயணிகள் ரயில் போக்குவரத்தின் மூலம் வருவாய் 71% அதிகரிப்பு

புதுடெல்லி: Railways Revenue Earnings up by 71% in Passenger Segment. 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை பயணிகள் போக்குவரத்தின் மூலம் ரயில்வே 71 சதவீதம் அதிகமாக ரூ.48,913 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை பயணச்சீட்டு முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை 6 சதவீதம் அதிகரித்து 59.61 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை 56.05 கோடியாக இருந்தது. 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை முன்பதிவு செய்த பயணிகள் மூலம் 46 சதவீதம் அதிகமாக ரூ.38483 கோடி ரூபாய் ஈட்டியது. அதன் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.26400 கோடி ஈட்டியிருந்தது.

2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை முன்பதிவு இல்லா பயணச்சீட்டு பயணிகளின் எண்ணிக்கை 137 சதவீதம் அதிகரித்து 40197 லட்சமாக இருந்தது. இது அதன் முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் பயணிகளின் எண்ணிக்கை 16,968 ஆக இருந்தது. 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை முன்பதிவு இல்லா பயணச்சீட்டு பயணிகள் மூலமான வருவாய் 381 சதவீதம் அதிகரித்து ரூ.10.430 கோடியாக இருந்தது. இது அதன் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2169 கோடி அளவிற்கு வருவாய் ஈட்டப்பட்டிருந்தது.

சரக்குப் போக்குவரத்து மூலம் ரயில்வேத்துறைக்கு ரூ.120478 கோடி வருவாய்

2022-23ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இந்திய ரயில்வே கடந்த நிதியாண்டை விட, அதிக வருவாய் ஈட்டியிருக்கிறது. 2022ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்திய ரயில்வேயில் 1109.38 மெட்ரிக்டன் சரக்குகள் கையாளப்பட்டிருக்கின்றன. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில், 1029.96 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இதன் மூலம் சரக்குகள் கையாளுதல் 8 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதே போல், இந்த நிதியாண்டுக்கான வருமானம் ரூ.120478 கோடியாகவும், கடந்த நிதியாண்டில் டிசம்பர் வரையிலான காலகட்டத்திற்கான வருமானம் ரூ. 104040 கோடியாகவும் உள்ளது. இதன் மூலம் கடந்த நிதியாண்டைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டின் வருமானம் 16 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 126.8 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்ட நிலையில், 2022 டிசம்பர் மாதத்தில் 130.66 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இதன் மூலம் சரக்குகளை கையாளுதல் கடந்த ஆண்டைக் காட்டிலும் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. சரக்குப் போக்குவரத்து மூலம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிடைத்த வருவாய் ரூ.12914 கோடியாக இருந்த நிலையில், 22-ம் ஆண்டுக்கான டிசம்பர் மாத வருமானம் ரூ.14573 கோடியாக உள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சரக்குப் போக்குவரத்து மூலம் வருவாய் 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.