Metro Pillar Collapses: பெங்களூருவில் மெட்ரோவுக்கு அமைக்கப்பட்ட தூண் சரிந்து விழுந்ததில் தாய், மகன் உயிரிழப்பு

பெங்களூரு: கர்நாடகா மாநிலம், பெங்களூரு நாகவரா (Metro Pillar Collapses) பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதில் கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர் பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலத்துக்காக பிரமாண்டமான தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாகவரா பகுதியில் இன்று மெட்ரோ ரயில் பாதைக்கான தூண் ஒன்று திடீரென்று இடிந்து சாலையில் விழுந்தது. அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 3 பேர் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களை அங்கிருந்த மெட்ரோ பணியாளர்கள் விரைந்து மீட்டனர். படுகாயமடைந்த கணவன், மனைவி அவர்களது 2 வயது மகன் ஆகிய 3 பேரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.

இதில் சிகிச்சை பலனின்றி தாய், 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர். தூண் விழுந்து தாய், மகன் உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.