டெல்லி: நாட்டின் 74வது குடியரசு தின விழா (74th Republic Day Celebrations) இன்று (ஜனவரி 26) கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (முன்பு ராஜபாதை) குடியரசு தின விழா கொண்டாடப்பட இருக்கிறது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விழா காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதன் காரணமாக முக்கிய பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்டோர் முன்கூட்டியே அங்கு வருகை தருவார்கள் என கூறப்படுகிறது.
இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று இந்தியா கேட் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ள கடமையின் பாதை விஜய் சவுக் ஜனாதிபதி மாளிகை சந்திப்பு பகுதிக்கு வருகை தருவார். இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைப்பார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்படும். இந்த ஆண்டு நவீனத்துவங்கள் புகுத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.