74th Republic Day: 74வது குடியரசு தினம்: சென்னையில் தேசிய கொடியேற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு (74th Republic Day) சென்னை காமராஜர் சாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

இந்திய நாட்டின் 74வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று (ஜனவரி 26) கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மெரினாவில் உள்ள அரசியல் தலைவர்களின் நினைவிடங்களுக்கு செல்வதற்கு நேற்று முதல் பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகளை போலீசார் பார்வையிட்டு வருகின்றனர். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முப்படைகளில் தளபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைக்கிறார். தொடர்ந்து, தேசிய கொடியை ஏற்றி வைக்கும் ஆளுநர், முப்படைகளின் அணிவகுப்பை ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.