ஸ்ரீநகர் : 15 dead in Amarnath cloudburs : அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் 15 பேர் உயிரிழப்பு. 40 க்கும் மேற்பட்டவர்கள் காணவில்லை. தெற்கு காஷ்மீரில் இமயமலை அடிவாரத்தில் உள்ள அமர்நாத் புனித குகையின் அடிவார முகாம் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் அமர்நாத்திற்கு யாத்திரை சென்ற பலர் சிக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து அங்கு சென்ற பேரிடர் மீட்பு பணியினர், மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மீட்புப் பணியில் இதுவரை வெள்ளத்தில் சிக்கி இறந்த 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன 40-க்கும் அதிகமானோரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அமர்நாத்திற்கு யாத்திரை செல்பவர்கள், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
பால்டால் மற்றும் பஹல்காம் ஆகிய இரு வழித்தடங்களிலும் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் குகைக்கு யாத்தீரிகர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்முவின் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு கூட பயாத்தீரிகர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அமர்நாத் குகையின் மேற்பகுதியில் பெய்த கனமழையால் குகையின் மேல்பகுதியில் இருந்து பெரும் வெள்ளம் வந்துள்ளது. மழை நின்ற பின் தொடர்ந்து காணாமல் போனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் அமர்நாத் கோவிலின் நங்கூரங்கள் மற்றும் கூடாரங்கள் அடித்து செல்லப்பட்டன. மேக வெடிப்பால் 15 பேர் இறந்துள்ளதையடுத்து, பிரதமர் மோடி, இரங்கல் தெரிவித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.