பொள்ளாச்சி: Shopkeeper arrested for sexually harassing girls. பொள்ளாச்சி அருகே கடைக்கு வரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடைக்காரர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையைச் சேர்ந்தவர் நடராஜ். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பொருட்கள் வாங்க வரும் சிறுமிகளிடம் அடிக்கடி பாலியல் ரீதியான தொந்தரவு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பாலியல் ரீதியான தொந்தரவுகளை தங்களது பெற்றோர்களிடம் சொல்ல முடியாமல் செய்வதறியாது அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், அவர்கள் படித்துவரும் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர் தலைமையில் பாலியல் பாதுகாப்பு குறித்து பள்ளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 10க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்களது தலைமை ஆசிரியரிடம் தாங்கள் வசிக்கும் பகுதியில் மளிகை கடைக்காரர், எங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், அடிக்கடி பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாகவும், தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை தெரிவித்தனர்.
இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மளிகை கடைக்காரர் நடராஜனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், மளிகைக்கடைக்காரர் கடைக்கு வரும் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மளிகைக்கடைக்காரர் நடராஜ் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 9 பிரிவுகளிலும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த ஆண்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற பலாத்கார வழக்கு தொடர்பான பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில, தொடர்ந்து அப்பகுதிகளில் பாலியல் ரீதியான சீண்டல்கள் நடைபெற்று வருவது வருத்தத்தையும், பெண்களுக்கு எதிராக அஞ்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.