சென்னை: நடிகரும் சமத்துவ மக்கள் (Tamil Nadu Day) கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. ஏராளமான தலைவர், தியாகிகளின் போராட்டம் மற்றும் உயிர்த்தியாகத்தால் சென்னை மாகாணம் தமிழ்நாடு என்ற பெயர் பெற்றது.
இதற்கு பிரபல சுதந்திர போராட்ட வீரர் சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு தனது உயிரை நீத்தார். அதன் காரணமாக 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி, சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டுவதற்கு வகை செய்யும் தீர்மானம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் தமிழ்நாடு என்ற பெயர் அமலுக்கு வந்த நாளான ஜனவரி 14ம் தேதியை தமிழ்நாடு தினமாக நாம் ஏன் கொண்டாடக்கூடாது. தமிழர்களின் பாரம்பரியமான அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் அதே நாளில் தமிழ்நாடு தினம் கொண்டாடினால் கூடுதலான சிறப்பு. இதற்காக போராடிய தியாகி சங்கரலிங்கனாருக்கு மெரினாவில் சிலை வைத்தும், அவர் தியாகத்தை கவுரவிக்கும் விதமாக தியாகி சங்கரலிங்கனார் தினம் அனுசரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.