Director Vamshi Interview: அஜித், விஜய் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது எனக்கு தெரியாது: இயக்குனர் வம்சி

சென்னை: Director Vamsi said that he did not know if Ajith and Vijay’s films will release at the same time. அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது எனக்கு தெரியாது என இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 11ம் தேதி முதல் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகின. இந்த படத்தை இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் எனப்பெரிய நட்சத்திரக் கூட்டமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் வாரிசு படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு மற்றும் கே எல் பிரவீன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டார். வாரிசு படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல் வணிக ரீதியாகவும் இந்த படம் நல்ல வசூலைக் குவித்து வருகிறது. அதன்படி உலகம் முழுவதும் 5 நாட்களில் 150 கோடி ரூபாயும், 7 நாளில் 210 கோடி ரூபாய் வசூலித்தது என அறிவிக்கப்பட்டது. மேலும் வாரிசு படம் 11 நாளில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் விமர்சகர்களுக்கு பதிலளித்த வம்சி, நான் ஒரு பிரமாதமான படம் செய்கிறேன் என்று சொல்லவே இல்லை. ரசிகர்களை மகிழ்விப்பதற்காக படங்களைத் தயாரித்து வருகிறேன். வாரிசு மகிழ்வித்துள்ளதாக நான் நம்புகிறேன்; அதனால்தான் அது பாக்ஸ் ஆபிசில் வெற்றி நடை போடுகிறது என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் டிஜிட்டல் ஊடகச் சேனல் ஒன்றுக்கு வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி பைடிபள்ளி மற்றும் நடிகர் ஷியாம் ஆகியோர் ‘வாரிசு ரசிகர்கள் கொண்டாட்டம்’ என்ற பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்துள்ளனர். இந்த நேர்காணலில் பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரன் அவர்களுடன் உரையாடினார். அப்போது வாரிசு படம் குறித்து பல்வேறு கேள்விகளை அவர்களிடம் கேட்டார். அதற்கு சற்றும் தயங்காமல் வாரிசு படம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தனர். ரவீந்திரனும் நான் தளபதி விஜய்யின் வெறிகொண்ட ரசிகன் என கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.

இயக்குனர் வம்சி, ரவீந்திரனுடன் பேசும்போது, எதிர்மறையான விமர்சனங்களிலிருந்து நிறைய கற்றுகொண்டதாகவும், ஆக்கப்பூர்வமான எதிர்மறையான விமர்சனங்கள் மிகவும் மதிப்பு மிக்கது; விமர்சனங்களை உருவாக்குபவரும் மிகவும் முக்கியமானவர்கள் எனக் கூறினார்.

மேலும், வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாவது குறித்து தேதி முன்னரே முடிவு செய்யப்பட்டதா என்ற ரவீந்திரன் கேள்விக்கு பதிலளித்த வம்சி, விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதியே பொங்கலுக்கு வாரிசு படம் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டது. குடும்பப் படமான வாரிசு பொங்கலை முன்வைத்தே படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று எனக்கு தெரியாது. அதேபோல் அஜித் மற்றும் விஜய் படங்களின் போட்டி இப்படித்தான் இருக்க வேண்டும் என இயக்குனர் வம்சி தெரிவித்தார்.