வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ராம்பிரசாத் என்பவருக்கும், இலக்கியா என்ற பெண்ணுக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு வரதட்சணையாக 100 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி, சொகுசு கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் பணம் கேட்டு இலக்கியாவுடன் ராம்பிரசாந்த் மற்றும் அவரது பெற்றோர்கள் அடிக்கடி கொடுமைப்படுத்தியதாக இலக்கியா தனது பெற்றோருக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலக்கியா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக நேற்று மாலை அவரது கணவர் ராம்பிரசாத், இலக்கியாவின் பெற்றோர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் இலக்கியாவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வரதட்சணை கொடுமையாலேயே அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறி புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் அண்மையில் வரதட்சணை கொடுமையால் அடுத்தடுத்து பெண்கள் உயிரிழந்ததை அடுத்து அம்மாநில அரசு பல்வேறு சீர்திருத்த நவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், திருமணமான ஒரே வருடத்தில் கோவையில் இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.