தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. காஞ்சிபுரம், கரூர், கோவை, நீலகிரி என பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந் நிலையில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் எதிரொலியாக தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் இன்று கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.