திமுக ஒன்றிய செயலாளரை வம்புக்கு இழுத்த அதிமுக ஒன்றிய செயலாளர்!!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு குறுகிய காலமே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, தி.மு.க முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தை உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் மூலம் தொடங்கிவிட்டது.

இந்தநிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திலுள்ள அனைத்து கிராமத்திலும் கிராம சபைக் கூட்டம் போன்றே கூட்டம் நடத்தப்பட்டு அதில், அ.தி.மு.கவை நிராகரிப்போம்’என்று தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று அறிவித்தார். அதனையடுத்து, தி.மு.க சார்பில் கிராமங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டம் என்று கூட்டம் நடைபெற்றுவருகிறது.

இந்தநிலையில், கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் தரகம்பட்டியில் நேற்று திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.கே.சுதாகர், ‘கடந்த 10 ஆண்டுகளாக கடவூர் ஒன்றியத்தில் ஊழல்கள் நடைபெற்றதாக சில ஆதாரங்களை சமர்பித்து பேசியுள்ளார்.

இதையடுத்து கூட்டம் முடிந்து காரில் வீடு திரும்பிய திமுக ஒன்றிய செயலாளர் சுதாகரை, வழிமறித்த அதிமுக ஒன்றிய செயலாளரும், ஒன்றிய சேர்மனாக இருந்து வரும் செல்வராஜ் மற்றும் அவருடன் வந்த 10க்கும் மேற்பட்டோர் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.