குடும்பத்தகராறில் மனைவி, குழந்தையை கொன்று தொழிலாளி தற்கொலை

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் நாகேந்திர கடா கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லப்பா கடாதா (30). இவரது முனைவி சுதா (24). இந்தத் தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. மல்லப்பா – சுதா தம்பதிக்கு 3 மாதங்களே ஆன ரூபாஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. மல்லப்பா வசிக்கும் வீடு தோட்டத்தில் அமைந்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை மல்லப்பாவின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் கிராம மக்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது, மல்லப்பா ஒரு அறையிலும், மற்றொரு அறையில் சுதாவும், குழந்தையும் தூக்கில் பிணமாக தொங்கினர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் கஜேந்திரகடா போலீசார் விரைந்து வந்து வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, படுக்கை அறையில் சுதாவும், குழந்தையும் தூக்கில் தொங்கினர். மற்றொரு அறையில் மல்லப்பா பிணமாக தொங்கினார்.

இதனால், தனது மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்துவிட்டு மல்லப்பாவும் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதன் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் குடும்ப பிரச்னையில் குழந்தையை கொன்றுவிட்டு சுதா தற்கொலை செய்திருக்கலாம் என்றும், அதனால் மல்லப்பாவும் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் 3 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான், 3 பேரின் சாவு பற்றி சரியான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கஜேந்திரகடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: லண்டனில் குடியேறும் அம்பானி குடும்பம்