நாளை வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடபெற்று வருகிறது.

நேற்றுவரையில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 41,027 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 10,107 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,683 வேட்புமனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 228 வேட்புமனுக்களும் என 54,045 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை ( செப்டம்பர் 22) கடைசி நாள் என்பதால் வேட்புமனுதாக்கல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், வேட்புமனு தாக்கல் செய்யும் பொது வேட்பாளர்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 200 ரூபாயும், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 600 ரூபாயும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1000 ரூபாய் வைப்புத்தொகையும் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த வேட்பாளர்கள் இதில், 50 சதவீதத் தொகையை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 3வது முறையாக வெற்றி கண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ !