ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆசிரியப் பணி என்பது மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணியாகும். மாணவர்கள் இடைநிற்றல் இன்றி தரமான கல்வியை பெறுவதற்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அமல் படுத்தி வருகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: ஆசிரியர், பெற்றோர், மாணவர் என்ற முக்கோண வடிவத்தில் முதன்மையானவர் ஆசிரியர். தாய் போல ஆசிரியரும் தன்னிடம் பாடம் பயிலும் பிள்ளைகளை வேறுபடுத்தி பார்ப்பதில்லை. மாணவர்களின் ஒளிமயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆசிரியர்களுக்கு, எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: சமூகத்தில் சிறந்த குடிமக்களை ஆசிரியர்கள்தான் உருவாக்குகின்றனர். அத்தகைய ஆசிரியர்கள் அனைவருக்கும் காங்கிரஸ் சார்பாக ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.