தமிழகத்தில் ஆளுநர் மாற்றம் நடைபெறுமா!

தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநராகப் பன்வாரிலால் புரோகித் உள்ளார். இவர் 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்று 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வர இருக்கிறது. இந்த நிலையில் ஆளுநர் மாற்றப்படலாம் எனத் தகவல் கசிந்துள்ளது.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக தெலுங்கு திரைப்பட நடிகரும், அரசியல்வாதியுமான கிருஷ்ணம் ராஜு நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய ஆளுநரான பன்வாரிலால் புரோகித், தமிழ்நாடு மாவட்டங்களில் அரசின் திட்டங்களை ஆய்வுசெய்தது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது. அதேபோல, கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்திய உதவி பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில், ஆளுநரின் பெயர் அடிபட்டு சர்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில் தேர்தலின்போது ஆளுநர் மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.