TN Assembly: தமிழக சட்டசபை கூட்டம் நாளை மீண்டும் தொடங்குகிறது

தமிழக சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபை கூட்டம்

TN Assembly: தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது.

இரண்டு பட்ஜெட் மீதும் 24-ந்தேதி வரை விவாதம் நடந்தது. அமைச்சர்கள் பதிலுரைக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இப்போது துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்ற சட்டசபை கூட்டம் நாளை மீண்டும் கூடுகிறது.

முதல் நாளான நாளை (புதன்கிழமை) நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட சட்டமன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் பேசுவார்கள். இறுதியில் அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசுவார்.

இடையிடையே அனல் பறக்கும் விவாதங்கள் ஏற்பட்டால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிப்பார். இதே போல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் குறுக்கிட்டு பேசுவார்.

இதே போல் ஒவ்வொரு நாளும் துறை ரீதியாக மானியக் கோரிக்கைகள் மீதும் விவாதம் நடைபெறும்.

முக்கிய அறிவிப்புகள் இருந்தால் 110 விதியின் கீழ் அவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.

சொத்து வரி உயர்வு, நீட் தேர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

எனவே தினமும் மானிய கோரிக்கையின் போது அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும். சட்டசபை கூட்டம் மதியம் 2 மணி வரை நடைபெறும் என்பதால் கோட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: MK Stalin: தி.மு.க. ஆட்சியை மக்கள் பாராட்டுகின்றனர்- மு.க.ஸ்டாலின்