திருப்பதி உண்டியல் வருமானம் 4-ல் ஒரு பங்காக குறைந்தது!!!

நோய்த்தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வருகை பெரிதும் குறைந்துள்ளது. இது உண்டியல் வசூலிலும் எதிரொலித்திருக்கிறது.

திருப்பதியில் சுமார் 3 மாதங்களுக்கு பக்தர்கள் தரிசனம் தடை செய்யப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு தளர்வு அளித்த பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டில் திருமலைக்கு 2.74 கோடி பக்தர்கள் வருகை புரிந்தனர்.

இதன்மூலம் ரூ.1,281 கோடி உண்டியல் வசூலானது. ஆனால் 2020-ம் ஆண்டில் 80 லட்சம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இதன் காரணமாக ரூ.500 கோடியாக உண்டியல் வசூல் குறைந்தது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் நான்கில் ஒரு பங்காக வசூல் சரிந்திருக்கிறது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் முறையே 22.09 லட்சம், 21.28 லட்சம் பக்தர்கள் திருமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

மாத வாரியாக இதன்மூலம் ரூ.92.09 கோடி மற்றும் ரூ.88.85 கோடி வசூலானது. அதன்பின்னர் தான் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது. 3 மாதங்களுக்கு பிறகு ஜூன் 8-ந்தேதி பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்த மாதம் மட்டும் 3.89 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜூலையில் 2.38 லட்சம், ஆகஸ்டில் 2.29 லட்சம், செப்டம்பரில் 2.53 லட்சம், அக்டோபரில் 5.49 லட்சம், நவம்பரில் 8.47 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் ஜூன் மாதம் ரூ.11.04 கோடியும், ஜூலை மாதம் ரூ.16.69 கோடியும், ஆகஸ்ட் மாதம் ரூ.18.43 கோடியும், செப்டம்பர் மாதம் ரூ.47.53 கோடியும், நவம்பர் மாதம் ரூ.61.30 கோடியும் உண்டியல் வசூலாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு திருமலைக்கு வந்த பக்தர்களின் மாத சராசரி 20 லட்சமாக இருந்தது. மேலும் உண்டியல் வசூல் கொரோனாவிற்கு முந்தைய காலகட்டத்தில் மாதம் சராசரியாக ரூ.90 முதல் ரூ.100 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.