திருக்குறள் படிக்கும் ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை செய்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, தமிழுணர்வை புரிந்துகொள்வதற்காக தாம் திருக்குறள் படித்து வருவதாக கூறியுள்ளார்.

மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள ராகுல்காந்தி, கரூர் பேருந்து நிலையத்தில் பேசும்போது, “எவ்வளவு வலிமை குன்றியவர்களாக இருந்தாலும் தமிழ் மக்கள் கௌரவத்தையும் சுய மரியாதையையும் தமிழுணர்வையும் பேணுவார்கள்.

நான் தமிழுணர்வை புரிந்துகொள்ள விரும்புகிறேன். ஆகவே திருக்குறளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். இந்த நேர்மறை மனப்பான்மையும், உறுதியான நம்பிக்கையும், சுய மரியாதையும் ஏதோ புதிதான ஒன்றல்ல; அது உங்கள் மொழியிலும் பண்பாட்டிலும் ஊடாக இணைந்துள்ளது,” என்று கூறினார். பிரதமர் நரேந்திர மோடி தமிழுணர்வை மதிக்கவில்லை. அவர் இன்னும் திருக்குறள் புத்தகத்தை திறக்கவேயில்லை எனவும் தெரிவித்தார்.