2 ஆண்டுகளாக குழந்தைகளுடன் கழிப்பறையில் வசிக்கும் பெண்

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தனது 2 குழந்தைகள், மாமியாருடன் ஒரு சிறிய கழிப்பறையில் பெண் ஒருவர் வசித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பாலநகர் மண்டல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. இவர் தினக் கூலியாகப் பணியாற்றி வருகிறார்.

சுஜாதாவின் கணவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததையடுத்து தனது 2 குழந்தைகள் மற்றும் மாமியாருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, தெலுங்கானா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக சுஜாதாவின் வீடு இடிந்து விழுந்தது. இதனால் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் தனது 2 குழந்தைகள் மற்றும் மாமியாருடன், சுஜாதா தஞ்சமடைந்தார். அங்கிருந்தும் சில நாட்களில் அவர்களை வெளியேறச் சொல்லியுள்ளனர்.

வசிப்பதற்கு இடமின்றித் தவித்த சுஜாதா, அதே பகுதியில் அரசு கட்டிய பொது கழிப்பறையை வீடாக மாற்றி கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். கழிப்பறையில் அமைந்திருந்த மலம் கழிக்கும் பகுதியை கடப்பா கல் வைத்து மறைத்து வைத்துள்ளார்.

மேலும் அந்த கழிப்பறையில் சமையல் எரிவாயு சிலிண்டர், அடுப்பு போன்ற பொருட்களையும் வைத்துள்ளார். 2 ஆண்டுகளாக 2 குழந்தைகள் மற்றும் மாமியாருடன் ஒரு சிறிய கழிப்பறையில் பெண் ஒருவர் குடும்பம் நடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்