ஆசிரியர் ராஜகோபாலனை ஜூன் 3ந் தேதி மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும்

சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளியில் பணியாற்றிவந்த வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், அங்கு படித்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வடபழனி போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தன் மீது வேண்டுமென்றே பொய்ப்புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதற்கிடையே ஆசிரியர் ராஜகோபாலன் எந்த ஆண்டு முதல் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார், அவரால் எத்தனை மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கவேண்டும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி முகமது பரூக் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதி, ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3-ந்தேதிக்கு (வியாழக்கிழமை) தள்ளிவைத்தார்.

இந்நிலையில் ஆசிரியர் ராஜகோபாலனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய இன்ஸ்பெக்டரின் மனு மீதான விசாரணை போக்சோ சிறப்பு கோர்ட்டில் இன்று நடைபெற்றது.

மனுவை விசாரித்த நீதிபதி ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

ஆசிரியர் ராஜகோபாலனை ஜூன் 3ந்தேதி மீண்டும் ஆஜர்படுத்த போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ஆசிரியர் ராஜகோபாலனை 5 நாள் காவலில் விசாரிக்க போலீசார் அனுமதி கோரிய நிலையில் 3 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.