டாஸ்மாக் கடைகளை மூட அதிரடி உத்தரவு

தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 827 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 6,064 பேர், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 10,792 பேர்,கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 61,750 பேர் என மொத்தம் 79,433 பேர் போட்டியிடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவில் 17,130 காவல்துறையினர், 3,405 ஊர்க் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மற்றும் தற்செயல் தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் 07.10.2021 காலை 10 மணி முதல் 09.10.2021 நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 12.10.2021 அன்று வாக்கு எண்ணும் பகுதிகளிலும், மேற்படி பகுதிகளுக்கு 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் ஆகியவற்றை மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது.