மீண்டும் சிரியா பேருந்து மீது திடீர் தாக்குதல்

கிழக்கு சிரியாவில் பேருந்து ஒன்று தாக்கப்பட்டதில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிப்பாய்கள் என்று கூறப்படுகிறது.

அதே நேரம், சிரியாவின் அரசு ஊடகம் இறந்தவர்கல் அனைவரும் குடிமக்கள் என்று கூறுகிறது.

பதற்றம் மிகுந்த டெய்ர் அல்-ஜோர் மாகாணத்தில் புதன்கிழமை நடந்த இந்த தாக்குதல் நடந்துள்ளது.

ஆனால், ஒரு கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட பிற வட்டாரங்கள் பேருந்தில் சிப்பாய்கள் இருந்ததாகத் தெரிவிக்கின்றன. இறந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகம் என்று அவை தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

பிரிட்டனில் இருந்து இயங்கும் ‘சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ்’ என்ற மனித உரிமை அமைப்பு ஐ.எஸ். அமைப்புடன் இந்த தாக்குதலை தொடர்பு படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 37 என்றும் அது கூறுகிறது.

ராய்டர்ஸ் செய்தி முகமை மேற்கோள் காட்டும் பிற வட்டாரங்களும் அந்தப் பேருந்துகளில் சிரியாவின் அரசுத் துருப்புகள் இருந்தன என்றே கூறுகின்றன.

புராதன பல்மைரா நகருக்கு அருகில் உள்ள இந்தப் பகுதியில் ஐ.எஸ். அமைப்பினரும் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு ஆதரவான சிரியாவின் துருப்புகளும் அடிக்கடி மோதுவார்கள்.

2014ம் ஆண்டு ஒரு கட்டத்தில் மேற்கு சிரியாவில் இருந்து கிழக்கு இராக் வரை பரவியிருந்த 88 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கட்டுப்படுத்தி பல லட்சக் கணக்கான மக்கள் மீது கொடூரமான ஆட்சியை நடத்தியது ஐ.எஸ்.