ஓய்வுப்பெற்றுவிட்டதால் நீதியரசர் கலையரசன் ஆணையம் என்னை விசாரிக்க முடியாது- சூரப்பா

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியில் இருந்து ஓய்வுப்பெற்றுவிட்டதால் நீதியரசர் கலையரசன் ஆணையம் என்னை விசாரிக்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் சூரப்பா வாதிட்டுள்ளார்

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா கடந்த 2018ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் ஊழல் நடந்ததாக தமிழக உயர்கல்வித்துறைக்கு புகார்கள் சென்றன. இதில் துணைவேந்தருக்கும் தொடர்பிருப்பதாக சொல்லப்பட்டது. இதுபற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், விசாரணை ஆணையத்துக்குத் தடை கோரியும், அவர் வழக்குத் தொடர்ந்தார். இதனிடையே துணைவேந்தர் பணியிலிருந்து சூரப்பா ஓய்வு பெற்றுள்ளார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரியர் தேர்வு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு உயர்கல்வி நிறுவனமாக மாற்ற முயன்றதாலும், இட ஒதுக்கீடு கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற தவறான கருத்து காரணமாகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சூரப்பா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அரசுத் தரப்பில், தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால், வழக்கை மற்றொரு தேதிக்குத் தள்ளிவைக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்டது. நீதிபதி கலையரசன் ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாலும், அதன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை கூடாது என இடைக்கால உத்தரவு உள்ளதாலும், வழக்கை ஒத்திவைக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி கோவிந்தராஜ், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இடைக்கால உத்தரவை நீட்டித்து, வழக்கை ஜூன் மாதத்திற்குத் தள்ளி வைத்துள்ளார்.