Caught on Cam: இளைஞரை 120 அடி உயரத்திற்கு தூக்கிச்சென்ற பட்டம்

srilankan man flew
தூக்கிச்சென்ற பட்டம்

Caught on Cam: சுமார் 120 அடி உயரத்தில் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த இளைஞரை மீட்க அவரது நண்பர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், உடல் எடையைக்கொண்டே கீழே வந்த இளைஞர், தரையில் குதித்து உயிர் தப்பினார்.

படித்து பட்டம் வாங்குவதை விட ஆகாயத்தில் பல வண்ணங்களில் பட்டம் விடுவதிலேயே இளைஞர்கள், குழந்தைகள் மகிழ்ச்சி அடைகின்றனர். பட்டம் விடும் போது பல்வேறு விபரீதங்களும் நிகழ்வது உண்டு. பொதுவாக நம்மூர்களில், காத்தாடியுடன், மாஞ்சாவை கலந்து விடுவதால் பல முறை உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கிறது. இதனால் மாஞ்சா கலந்து காத்தாடி விடுவதை தடை செய்துள்ள அரசு, விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் பட்டம் விடும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. அப்போது ஒரு சில விபத்துகள் நிகழ்வது உண்டு. ஆனால் இலங்கையில் பட்டம் விடும்போது நடைபெற்றுள்ள விபத்து உலகம் முழுவதும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. யாழ்ப்பாணம் மாவட்டம் புலோலியைச் செர்ந்தவர் நடராசா மனோகனரன். 27 வயதாகும் நடராசா மனோகரன், வடமராட்சியில் உள்ள மந்திகை பகுதியில் தமது நண்பர்கள் உடன் இணைந்து பட்டம் விட்டு விளையாடி இருக்கிறார்.

விதவிதமான பட்டங்களை பறக்க விட்டு மகிழ்ந்த இளைஞர்கள் ஒரு கட்டத்தில் மிகப்பெரிய ராட்சத பட்டம் ஒன்றை பறக்க விட்டனர். அதன் பின்னர் அந்த பட்டத்தோடு வேறொரு பட்டத்தையும் இணைத்து பறக்க விட முற்பட்டுள்ளனர். அப்போது, நடராசா மனோகரன் முதல் ஆளாக பட்டத்தின் கயிற்றை பிடித்திருந்தார். அவரது நண்பர்கள் அனைவரும் கயிற்றை விட்டுவிட்ட நிலையில், இரண்டு பட்டங்களின் கயிற்றையும் பிடித்திருந்த நடராசா மனோகரனை, பட்டம் ஆகயத்தில் இழுத்துச் சென்றது.

சுமார் 120 அடி உயரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட நடராசா மனோகரன், அந்தரத்தில் உயிர் பயத்தில் கூச்சலிட்டார். அவரை காப்பாற்ற முயன்ற சக நண்பர்கள் பட்டத்தின் கயிற்றை இழுந்த்து அவரை கீழே கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் அந்த முயற்சிகள் பலன் கொடுக்கவில்லை. சுமார் 12 நிமிடம் உயிருக்காக போராடடிய நடராசா மனோகரன், தமது உடல் எடையைக் கொண்டே பட்டத்தை கீழே இழுக்க முயற்சித்தார். அவரது முயற்சிகள் பலன் கொடுக்கவே நூற்றுக்கும் அதிகமான அடி உயரத்தில் பறந்த நடராசா மனோகரன், சுமார் 20 அடி உயரத்திற்கு கீழே வந்தார். தரையை நெருங்கியதும் பட்டத்தின் கயிற்றை விட்டு கீழே குதித்த நடராசா மனோகரன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அந்தரத்தில் இளைஞர் உயிருக்காக போராடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த செய்தி ஊடகங்களும், இளைஞர் அந்தரத்தில் பறந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பட்டத்துடன் ஆகாயத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட நடராசன் மனோகரன், தமக்கு நேர்ந்த சுவாரஸ்யமான அனுபவத்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், பட்டம் விடும்போது நான் தான் முன்னால் நின்றேன், எனக்கு பின்னால் இருந்தவர்கள் கையை விட்டது எனக்குத் தெரியாது. இரண்டு முறை பட்டம் கயிற்றுடன் மேலே இழுத்தது, எனினும் நான் கையை விடவில்லை, மூன்றாவது முறை கயிற்றுடன் மேலே இழுத்துச் சென்று விட்டது. 120 அடிக்கும் மேல் கயிற்றை பிடித்த வண்ணம் மேலே சென்றுவிட்டிருந்தேன். என்னைக் காப்பாற்றுமாறு கூறி நான் கத்தினேன், நான் உயிரிழந்துவிட்டேன் என முதலில் நினைத்தேன். இதிலிருந்து தப்பிக்க மாட்டேன் என எண்ணினேன், கீழே பார்த்திருந்தால் நிச்சயமாக நான் விழுந்திருப்பேன். என் உடன் இருந்தவர்கள் கயிற்றைப் கீழே இறக்கினார்கள். நானும் முயற்சி செய்து கீழே வந்தேன். ஒரு இருபது அல்லது முப்பது அடி இருக்கும் வரை கொண்டு வந்த பின்னர் நான் கையை விட்டுவிட்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. பிறகு வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சைப் பெற்று வந்தேன் என உயிர்தப்பிய இளைஞர் நடராசா மனோகரன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி