ராஜ் குந்த்ராவை விட்டு பிரிய ஷில்பா முடிவு

ஆபாச பட விவகாரத்தில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை விட்டு பிரிய, அவரது மனைவியும், ‘பாலிவுட்’ நடிகையுமான ஷில்பா ஷெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘பாலிவுட்’ நடிகை ஷில்பா ஷெட்டி, 46. இவர், லவ் பேர்ட்ஸ், குஷி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். இவருக்கும், தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கும், 2009ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஆபாச படம் எடுத்து, அதை ‘மொபைல் போன்’ செயலியில் பதிவேற்றம் செய்த விவகாரத்தில், ராஜ் குந்த்ராவை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இது, நடிகை ஷில்பா ஷெட்டியை அதிர்ச்சி அடைய செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து, ஷில்பாவின் தோழி கூறியதாவது: ஆபாச படம் எடுத்ததன் வாயிலாக ராஜ் குந்த்ரா கோடி கோடியாக சம்பாதித்தது, ஷில்பாவுக்கு தெரியாது. எனவே, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும், ஷில்பா நொறுங்கிப் போனார். தவறான முறையில் சம்பாதித்த பணத்தில் தன் குழந்தைகளை வளர்க்க அவர் விரும்பவில்லை. எனவே, ராஜ் குந்த்ராவை விட்டு பிரிய திட்டமிட்டுள்ளார். திரைப்பட வாய்ப்புகள் மற்றும் ‘டிவி’ நிகழ்ச்சிகள் வாயிலாக, ஷில்பாவுக்கு தேவையான வருமானம் கிடைக்கிறது. எனவே, இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.