Crime: “கத்திமுனையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்” – கைதான சிறுவர்கள்!!

Crime: தனியார் மருத்துவமனை பெண் மருத்துவரை ஆட்டோவில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி கிரிவலம் சாலையில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் 2 நாட்களுக்கு முன்பு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளார். படம் முடிந்து இரவு 12.30மணிக்கு மருத்துவர் ஆட்டோக்காக தியேட்டர் முன்பு காத்திருந்த நிலையில் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கடத்திச் சென்றுள்ளது.

தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று பெண் மருத்துவர் கூறியதாகவும், ஷேர் ஆட்டோ என்று ஏமாற்றி மருத்துவரை அவர்கள் ஆட்டோவில் ஏற்றி சென்றதாகவும் தெரிகிறது. சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது அந்தப் பெண் இந்த வழியாக ஏன் செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் அப்பகுதியில் வேலை ஏதும் நடக்கிறது என்று கூறி பாலாற்றின் கரைக்கு ஆட்டோவை கொண்டு சென்றுள்ளனர். அத்துடன் கத்திமுனையில் பெண் மருத்துவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து பெண் மருத்துவர் போலீசில் புகார் அளிக்காமல் இருந்த நிலையில், சத்துவாச்சாரி போலீசார் ரவுடி கும்பல் ஒன்றை கைது செய்து விசாரித்த நிலையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெண் மருத்துவரிடம் பறித்த 40,000 ரூபாய் பணத்தில் புதிய ஆடைகள் வாங்கி அவர்கள் உல்லாசமாக செலவு செய்து வந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் விஷயம் அம்பலமாகியுள்ளது. கைது செய்யப்பட்ட மூவர் 18 வயதுக்குக் வயதுக்குட்பட்ட மைனர் சிறுவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அத்துடன் தலைமறைவாகியுள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: Weather Update: தமிழகத்தில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்- வானிலை ஆய்வு மையம்