பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள்..!

education-news-10-11-12-public-exam
பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டு, ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. கொரோனா காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் திறக்கப்பட்டன. முதலில், 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்றன. இதையடுத்து, 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

இதனிடையே, கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா, ஒமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளை பொறுத்தவரையில், மழலையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை. 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கொரோனா பரவலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலன் கருதி 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, 10 முதல் 12 வரையிலான வகுப்புகளின் மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவே பள்ளிக்கு அழைக்கப்படுவதாகவும், நேரடி வகுப்புகள் நடத்துவதும், கலந்து கொள்வதும் கட்டாயமில்லை எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து பள்ளிகள் முடிவெடுக்கலாம் என்று கொள்கை முடிவெடுத்துள்ளதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, கொரோனா மூன்றாவது அலை அதிகரித்துவரும் நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்புகளின் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்கும்படியும், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தலாம் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ கல்லூரிகளை தவிர இதர கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரையில் வெளியாகலாம் என தெரிகிறது.

இதையும் படிங்க: பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்..!