அதிமுக கொடியுடன் தமிழகம் வந்தார் சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆனாலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு முதலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பிறகு விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தி கொண்டிருந்த சசிகலா, பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்டார்.

இன்று காலை 10.30 மணியளவில் தமிழக எல்லைக்குள் நுழைந்த அவருக்கு, ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அதிமுகவின் எதிர்ப்பையும் மீறி, சசிகலாவின் காரில் அந்த கட்சியின் கொடி பொருத்தப்பட்டுள்ளது.

தமிழக – கர்நாடக எல்லையில் சசிகலா நுழையும்போது அதிமுக கொடியை பயன்படுத்த வேண்டாம் என காவல்துறை வலியுறுத்தியும் சசிகலா பயணித்த வாகனத்திலிருந்து கொடி அகற்றப்படவில்லை.

மேலும், தமிழக எல்லைக்குள் நுழைந்ததும் பெங்களூரில் இருந்து பயணித்த காரில் இருந்து இறங்கி சசிகலா, மற்றொரு காரில் ஏறி தமிழக எல்லைக்குள் பயணிக்கத் தொடங்கினார்.